ஐயா எங்கள வுட்ருங்க! ஏதோ பந்தா பண்ணோம்! இனி ரயில பாத்தாலே ஓடிருவோம்! (வீடியோ)
ரயிலில் கத்தி வாள் என வைத்துக் கொண்டு, தரையில் தேய்த்து பயணிகளிடம் பயம் காட்டிய கல்லூரி மாணவர்கள், போலிஸாரிடம் பிடிபட்டதும் கெஞ்சி கூத்தாடினர். ஐயா எங்கள வுட்ருங்க... ஏதோ சும்மா பந்தா பண்ணோமுங்க என்று கெஞ்சியும் விடாத போலீஸார் அவர்களில் 4 பேரை கைது செய்தனர்.
முன்பெல்லாம் பஸ் டே என கொண்டாடம் தூள் பறக்கும். இப்போது ரயில் டேக்கு டேஸ்ட் மாறிவிட்டது போலும்!
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர், நெமிலிச்சேரிக்கு சென்ற புறநகர் ரயிலில், கத்தி, கம்பு, வீச்சரிவாள், பட்டாசுகளுடன் ரயிலில் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி கத்தியவாறே பயணம் செய்தனர். அதைக் கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து ஆவடி அருகிலுள்ள பட்டாபிராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்திலும், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மாலை நேரத்தில் வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்தனர். இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நெமிலிச்சேரியில், போலீஸ் துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்று, வீச்சரிவாளுடன் சுற்றிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை விரட்டிப் பிடித்தனர். அவர்களில் 4 பேரை கைது செய்தனர். உடன் இருந்த மாணவர்கள் தப்பி ஓடினர்.
பட்டாபிராம் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் அதேபோல் சுற்றிக் கொண்டு குரல் எழுப்பிய மாணவர்கள், ரயிலில் தொங்கிக் கொண்டு, பிளாட்பாரத்தில் கத்தியை தேய்த்தபடி, கோஷமிட்டுக் கொண்டு வந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், அந்த மாணவர்களை விரட்டிப் பிடித்தனர். அவர்களில் 4 பேர் மீது பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மற்ற மாணவர்கள் சிலரை, அவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பினர். கைதான நால்வரில் இருவர் 18 வயதுக்குக் குறைவானவர்கள். மற்ற இருவர் 19 வயது மாணவர்கள். அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீஸார், அவர்களிடமிருந்து 4 வீச்சரிவாளையும் கைப்பற்றினர்.
பிடிபட்டபோது அந்த மாணவர்கள், சும்மா பந்தா காட்டுவதற்காகவே அப்படி செய்ததாகவும், வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் போலீசாரிடம் கெஞ்சியுள்ளனர். அவர்கள், இனி எங்கள் வாழ்க்கையில் ரயில் பக்கமே வரமாட்டோம் என்று அழுது மன்னிப்பு கேட்டுள்ளனர்.