குன்னுாரில் டெங்கு காய்ச்சலால் ஆறு பேர் பாதிப்பு; அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…
நீலகிரி
குன்னுாரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆறு பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
நீலகிரியில் நிலவும் குளிரான காலநிலையால் டெங்கு கொசுக்கள் இங்கு உயிர் வாழ முடியாது. இதனால், இங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதில்லை.
இந்த நிலையில், வெளியூர்களுக்குச் சென்று திரும்பியவர்களில் பலருக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. அதன்படி பக்காசுரன்மலையைச் சேர்ந்த, பவித்ரன் (17), பெள்ளட்டிமட்டத்தைச் சேர்ந்த சுபத்திரா (47) ஆகியோர் டெங்கு காய்ச்சல் காரணமாக குன்னுார் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல, டென்ட்ஹில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி (37), ஊட்டி டயாசிஸ்சைச் சேர்ந்த பாதிரியார் பெரியநாயகம், (54), எஸ்.எம். நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் (41), சமயபுரம் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சதாம் (26) ஆகியோர் அனுமதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.