Asianet News TamilAsianet News Tamil

தம்பியுடன் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறால் அக்கா தூக்குப்போட்டு தற்கொலை…

sister attempted Suicide in thirupur
sister attempted Suicide in thirupur
Author
First Published Oct 20, 2017, 7:50 AM IST


திருப்பூர்

திருப்பூரில், தம்பியுடன் டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கா வீட்டின் அறையினுள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகேவுள்ள காளிபாளையத்தைச் சேர்ந்த குமரவேலின் மகள் தீபிகா (19). இவர் தனது பெற்றோருடன் அருகில் உள்ள பிளச்சிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் தீபாவளி விடுமுறை என்பதால் தீபிகா தனது தம்பியுடன் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இரவு 7 மணியளவில் டி.வி. பார்ப்பதில் அக்கா-தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தீபிகா அங்கிருந்து எழுந்து, அருகில் உள்ள அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பால் போட்டுக்கொண்டார்.

வெகுநேரமாகியும் மகள் வெளியே வராததால் பெற்றோர், தீபிகாவை அழைத்தும் அந்த அறையின் கதவை தட்டியும் பார்த்தனர். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளேச் சென்றனர். அங்கு தீபிகா கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தபடி பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதனர்.

பின்னர், இதுபற்றி தகவலறிந்த பெருமாநல்லூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அக்கா-தம்பிக்குள் டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்து தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் தீபிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios