திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது ரூ.886 கோடி செல்லாத நோட்டுகள்...
திருநெல்வேலி
செல்லாத ரூபாய் நோட்டுகள் 886 கோடியை, திருநெல்வேலி வங்கியாளர்கள் செந்தூர் விரைவு இரயில் மூலம் சென்னைக்கு பலத்த காவல் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
பிரதமர் மோடி, கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.
இதனையடுத்து, இந்தியாவில் இருக்கும் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களின் சுருக்குப் பைகளில் இருந்த காசு முதல் பீரோவில் சேமிப்பில் இருந்த பணம் வரை அனைத்தையும் வங்கியுடம் ஒப்படைத்தனர்.
மோடியின் இந்த அறிவிப்பு நூற்றுக்கு மேற்பட்டோரை காவு வாங்கியது. இன்னமும் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன என்று அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வங்கியாளர்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் ஒப்படைத்து வருகின்றனர்.
அதன்படி, ஏற்கெனவே இரண்டு கட்டமாக மதிப்பிழந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்பட்டன. வங்கியாளர்கள் 3-ஆம் கட்டமாக நேற்று இரவு 8.40 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்ட செந்தூர் விரைவு இரயிலில் தனி கோச் மூலம் ரூ.886 கோடி மதிப்பிழந்த நோட்டுகள் பலத்த காவல் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.