ரூ.3000 லஞ்ச பணத்துக்கு ஆசைப்பட்டு ஜெயிலுக்கு போன உதவி செயற்பொறியாளர்…
வேலூர்
வேலூரில் முறைப்படி வீட்டிற்கு மின்இணைப்பு வழங்காமல் வாடிக்கையாளரிடம் ரூ.3000 லஞ்சம் பணம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் பொடி வைத்து பிடித்து கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் மசூதி தெருவில் அப்துல்சாகிப் என்பவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். புதிய வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு ஆலங்காயம் மின்வாரிய அலுவலகத்தில் மனுவும் கொடுத்துள்ளார்.
மின் இணைப்பு வழங்க மின்சார வாரிய உதவிச் செயற்பொறியாளர் பாலுவை அணுகியபோது அவர், அப்துல்சாகிப்பிடம் ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார். பில் தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் லஞ்சமாக ரூ.5000 கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அப்துல்சாகிப் தன்னால் ரூ.5000 கொடுக்க முடியாது. ரூ.3000 தருவதாக தெரிவித்ததால் உதவி செயற்பொறியாளர் பாலு மின் இணைப்பு தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து அப்துல்சாகிப் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அப்துல்சாகிப்பிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து நேற்று காலை அப்துல்சாகிப், உதவி செயற்பொறியாளர் பாலுவைச் சந்தித்து ரசாயனம் தடவிய ரூ.3000 கொடுத்துள்ளார். இதுபற்றி எதுவும் அறியாமல் பணத்தை பார்த்ததும் வாயைப் பிளந்துக் கொண்டு பணத்தை வாங்கிய பாலுவை, அங்கு மறைந்திருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான காவலாளர்கள் கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர், உதவி செயற்பொறியாளர் பாலுவை கைது செய்து காவலாளர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.