அரசு மானியத்தை கொடுக்க ரூ.2500 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கைது; இடைத்தரகரும் அதிரடி கைது…
விருதுநகர்
அரசு மானியத்தை கொடுக்க ரூ.2500 இலஞ்சம் பெற்ற சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இலஞ்சம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகர் ஆகிய இருவரையும் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்.
ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 14 இடங்களில் தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட செல்வம் ஒப்பந்தம் பெற்றுள்ளார். முதல் கட்டமாக 4 இடங்களில் பணிகளை
முடித்துள்ளார்.
ஒரு கழிப்பிடம் கட்ட அரசு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்குகிறது. அதன்படி 4 கழிப்பிடங்களுக்கு ரூ.48 ஆயிரம் மானியம் செல்வத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்தப் பணத்திற்கான காசோலையைத் தருவதற்கு ரூ.3000 இலஞ்சம் வேண்டும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், செல்வத்திடம் கேட்டுள்ளார். இதற்கு இடைத்தரகராக ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் மீனாட்சி காலனியைச் சேர்ந்த மார்டின் (62) செயல்பட்டார்.
இதனையடுத்து ரூ.2500 இலஞ்சம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டதைத் தொடந்து செல்வம் விருதுநகரில் உள்ள இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புகார் கொடுத்தார். காவலாளர்கள் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வத்திடம் கொடுத்து அனுப்பினர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த சிவகுமாரிடம் நேற்று பிற்பகல் அந்தப் பணத்தை செல்வம் கொடுத்தபோது மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள், ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் ஆகியோர் பார்த்தனர்.
பின்னர், கையும் களவுமாக பிடிப்பட்ட சிவகுமாரையும், உடனிருந்த இடைத்தரகர் மார்டினையும் காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.