இந்தியாவில் முதன் முறையாக சென்னை ஓட்டலில் சர்வர்களாக ரோபோக்கள்!
ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று, அவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்டவைகளை செய்யும் புதிய வகை ஓட்டல் ஒன்று மகாபலிபுரம் சாலை, செம்மஞ்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ரோபோக்கள் சர்வர்களாக பணியாற்றும் ஓட்டல்கள் சென்னையில்தான் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் 747 என்று அந்த ஓட்டலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் விமானம் போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் கண்ணன், வெங்கடேசன் ஆகியோர் இந்த ஓட்டலுக்கு உரிமையாளர்களாக உள்ளனர்.
இந்த ஓட்டல் குறித்து கார்த்திக் கண்ணன் கூறும்போது, இதுபோன்ற ஓட்டல்கள், ஜப்பான் மற்றும் சீனாவில்தான் அதிக அளவில் உள்ளது. சென்னையில் முதன் முறையாக இங்குதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது என்றும் இது மகிழ்ச்சியளிப்பதாகவும்
அவர் கூறினார்.
இந்த ஓட்டலில் 4 ரோபோக்கள் உள்ளன. உணவகத்தில் உள்ள மேஜையில் பொருத்தப்பட்டுள்ள ஐபேட் மூலம் வாடிட்ககையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம் என்றும், அது டிரான்ஸ்மீட்டர் மூலமாக சமையல் அறைக்கு சென்றடையும். அதைப் பார்க்கும் சமையல்காரர்கள் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை சமைத்து, அதனை ரோபோக்கள் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர். ரோபோக்களும் உணவை வாடிக்கையாளர் டேபிளுக்கு கொண்டு சென்று சேர்க்கும்.
இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளரை வரவேற்கும் ரோபோ, அவர்களை டேபிளில் அமரவைப்பது வரை ரோபோக்களின் வேலையாக உள்ளது. மேலும், மீண்டும் தங்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு கொள்ளும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், ரோபோக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர். வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் சேவை செய்யும் வசதி கொண்ட இந்த ஓட்டல் தற்போது பிரபலமடைந்து வருகிறது.