4500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரின் உடல் மீட்பு!
திருச்சியில், கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது சுமார் 4500 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞரின் உடலை போலீசார் இன்று மீட்டனர்.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை நீலியாம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தலைமலை. இந்த தலைமலை சுமார் 4500 அடி உயரம் கொண்டதாகும். இந்த மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய நல்லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தலைமலை பெருமாளை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் நேர்த்தி கடன் மிகவும் சிறப்பம்சம் பெற்றதாகும். 4500 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோயிலின் சுற்றுப்பிரகார விளிம்பில் 2 அடி அங்குலம் உள்ள சுவரை பிடித்து கொண்டு பக்தர்கள் கிரிவலம் வருவர். இதேபோல் நேற்று பெரியார் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் சாமி தரிசனம் செய்து கோயில் பிரகாரத்தை சுற்றினார்.
இரண்டுமுறை வலம் வந்த ஆறுமுகம் மூன்றாவது முறை வலம் வரும்போது தவறி சுமார் 4500 அடி பள்ளத்தில் விழுந்தார். இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோயில் நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆறுமுகத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று வெகு நேரம் தேடியும் ஆறுமுகத்தை கண்டுபிடிக்க முடியாததாலும், இரவு நேரமானதாலும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
இன்று காலை மீண்டும் ஆறுமுகத்தை தேடும் பணியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், மலையடிவாரத்தில் ஆறுமுகத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தின் உடலை மீட்கும் முயற்சியில் போலீசாரும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.