இ.பி.கோ. 328_ன் படி குற்றம்தானே யுவர் ஆனர்?!: நீதியரசரை நெருங்கும் கேள்வி...
நீதிபதிகள் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆவது நம் தேசத்துக்கு ஒன்றும் புதிதில்லை. தேசிய அளவில் அங்கங்கேயிருந்து அவ்வப்போது சில நீதிபதிகள் தங்களின் தனித்துவமான தீர்ப்பு மற்றும் வழக்கு குறித்த கருத்துக்கள் மூலமாக பிரபலமாவார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் ஹிட் ஆனவர் நீதிபதி கிருபாகரன். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் சமயத்தில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை இவர் முன்பாகத்தான் வந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோரை விளாசித்தள்ளிவிட்டார் நீதியரசர்.
குறிப்பாக ஆசிரியர்களை நோக்கி ‘உங்களை நம்பி காத்திருக்கும் மாணவ செல்வங்களை யோசித்துப் பாருங்கள்’ என்று சொல்லி மாநிலத்தையே சிந்திக்க வைத்தார். இதன் பிறகு மதுரை உயர்நீதிமன்ற பெஞ்ச் தடாலடி உத்தரவுகளை பிறப்பித்து அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த கதையெல்லாம் தனி அதிரடி.
இந்நிலையில் நீதியரசர் கிருபாகரனை நோக்கி சட்டக்கல்லூரி மாணவிகள் இருவர் ஒரு கேள்வி பதாகையை நீட்டியிருக்கிறார்கள்! அதில்
‘நீதிபதி கிருபாகரன் கவனிக்க! டாஸ்மாக் மது விற்பது இ.பி.கோ. 328_ன் படி குற்றம் என்பது தெரிந்தும் நீதிமன்றம் தடுக்காதது ஏன்? பகிரங்கமாக இது பற்றி விவாதிக்க தயாரா?’ என்று அழுத்தமாக கேட்டிருக்கிறார்கள்.
நியாயமான கேள்விதான் இது! என்று சமூக ஆர்வலர்களும், மதுவுக்கு எதிரான போராளிகளும் ஆதரவு தெரிவிக்க துவங்கியிருக்கிறார்கள். நீதியரசர் கிருபாகரனிடம் அன்று வாங்கிக் கட்டிய அரசு ஊழியர்கள் ‘அதானே!’ என்று அகமகிழ்வதாக தகவல்.
நீதியரசர் சிந்திப்பாரா!