தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து ஆர்ப்பாட்டம்; டிஎஸ்பி-யிடம் புகார் மனுவும் கொடுத்தது விசிக…
நாகப்பட்டினம்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சீர்காழி டி.எஸ்.பியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது தவறான கருத்துகளை பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாகப்பட்டினம் வடக்கு மாவட்டச் செயலர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமைத் தாங்கினார்.
மாவட்டத் துணைச் செயலர் காமராஜ், தொகுதி கழகச் செயலர் தாமு இனியவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, நகரச் செயலர் தம்பி இனியதமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கிறிஸ்துவ சமூக நீதி பேரவை மாநில துணைச் செயலர் பால்ராஜ் ரெத்தினம், வழக்கறிஞர்கள் ராஜேஷ், செந்தில், மாவட்ட நிர்வாகிகள் ஆசைதம்பி, சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகரிடம் புகார் மனு கொடுத்தனர்.