உரத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு ரசீது தரமறுக்கும் கூட்டுறவு சங்க செயலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்…
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் உரம் வாங்கும் விவசாயிகளுக்கு ரசீது தர மறுக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலரைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம் கூட்டுறவு சங்கம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் செயலரைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலர் சி.பழனிவேல் தலைமைத் தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “கூட்டுறவுச் சங்கத்தில், உரம் வாங்கும் விவசாயிகளுக்கு ரசீது வழங்க மறுக்கும் கூட்டுறவுச் சங்கத்தின் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரசீது இல்லாமல் பண பரிமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பீமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் எல்.வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.