போலீஸ் எனக் கூறி பண வேட்டையில் இறங்கியவர்கள் காவலாளர்களிடம் சிக்கினர்…
திருப்பூர்
திருப்பூரில் போலீஸ் என்றுக் கூறி இளைஞர்களிடம் பண வேட்டையில் இறங்கிய இருவர் காவலாளர்களிடம் வசமாக சிக்கினர்.
கடலூரைச் சேர்ந்த சேதுபதி (20) என்பவர் திருப்பூரில் தங்கி நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். சேதுபதி தனது நண்பருடன் திருப்பூர் காமராஜ் சாலை அருகே சென்றுக் கொண்டிருந்தார்.
பெருமாள் கோயில் அருகே வரும்போது அவர்களை இருவர் வழி மறித்துள்ளனர். தங்களை போலீஸ் என்றுக் கூறி சேதுபதியையும் அவரது நண்பர்களையும் மிரட்டி உள்ளனர்.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டுச் சம்பவம் நடக்காமல் கண்காணிக்கிறோம் என்றுக் கூறி, சேதுபதியின் பாக்கெட்டிலிருந்த ரூ.300 பணத்தை எடுத்து உள்ளனர்.
இதுகுறித்து விவாதம் நடந்தபோது அங்குப் பாதுகாப்பு பணியிலிருந்த ஊர்க் காவல் படை வீரர் கார்த்திக் சென்று விசாரித்துள்ளார். அப்போது, அந்த நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர்.
உடனே, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கார்த்திக் மற்றும் பலர் இணைந்து போலீஸாக நடித்த இருவரையும் பிடித்து, தெற்கு காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், திருப்பூர் கருவம்பாளையத்தைச் சேர்ந்த சுகுமாரன் (24), விஜய் (25) எனத் தெரிந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் உண்மையான காவலாளர்கள் கைது செய்தனர்.