மயான பாதையில் செல்ல அனுமதிக்காததால் இறந்தவர்களைப் போல நெற்றில் காசு பதித்துக்கொண்டு மக்கள் போராட்டம்...
திருநெல்வேலி
திருநெல்வேலியில் மயான பாதையில் செல்ல அனுமதிக்காமல் வேற்று வகுப்பினர் பிரச்சனை செய்து வருவதால் அருந்ததியர் வகுப்பினர் இறந்தவர்களைப் போல நெற்றில் காசு பதித்துக் கொண்டு திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், எட்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களைப் போல் நாடிக்கட்டு, நெற்றியில் சந்தனம், காசு பதித்தவாறு மயான பாதையை மீட்டுத் தருமாறு முழக்கமிட்டபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.
பின்னர், குறைதீர் கூட்டத்தில் அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "எட்டிச்சேரி கிராமத்தில் 42 அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மயான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலையும் அமைக்கப்பட்டது.
அந்தச் சாலையை அமைத்த நாள் முதல் அவ்வழியாக எங்களைச் செல்லவிடாமல் மற்றொரு வகுப்பினர் பிரச்சனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, மயானப்பாதையில் அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்போடு சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.