பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை….
காஞ்சிபுரம்
பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மோசமாக நிலையில் இருக்கும் திருக்கழுக்குன்றம் - பெரும்பேடு சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம், கிளாப்பாக்கம், பாண்டூர் உள்ளிட்ட கிராம மக்கள், தங்களின் போக்குவரத்திற்கு திருக்கழுக்குன்றம்- - பெரும்பேடு சாலையைதான் நம்பியுள்ளனர். அதுதான் இவர்களின் ஒரே பயன்பாடு.
இந்தச் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து, குண்டும் குழியுமாகவும், கற்கள் பெயர்ந்தும் மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. இதனால், இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதோடு, பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், இச்சாலை வழியே இருபுறமும் விவசாயம் நிலங்கள் இருப்பதால், அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயிகளால் அவ்வழியேச் சென்று விவசாயப் பணிகளையும், மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர், இப்பகுதியில் கவனம் செலுத்தி, புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.