வடகிழக்கு பருவமழை நவ.1-ல் துவங்குகிறது: வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை நவம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நவம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை நவம்பர் 1 ஆம் தேதி வாக்கில் தமிழகம் புதுவை அதனையொட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திர ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா ஆகிய பகுதி பகுதிகளில் துவங்குவதற்கு சாதகமான சூழ்நிலை உள்ளதாக கூறினார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமானது முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அக்டோர் 1 முதல், இன்று 29 ஆம் தேதி வரை பெய்துள்ள சராசரி மழை நிலவரம். தமிழ்நாடு - புதுச்சேரி 16 செ.மீ. மழை பெய்துள்ளது. இயல்பாக 17 செ.மீ. மழை பொழிவு இருக்கும். ஆனால் இந்த முறை இயல்பைவிட 9 சதவீதம் குறைவு மழையளவு பதிவாகி உள்ளது.
சென்னையில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. இயல்பாக 24 செ.மீ. மழை பொழிவு உள்ள நிலையில், இயல்பைவிட 51 சதவீதம் குறைவு பதிவாகியுள்ளது. லுபான், டிட்லி புயல் காரணமாகவே வடகிழக்கு பருவமழை தாமதத்துக்கு காரணம்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை பகுதியில் வளிமண்டல சுழற்சி மேலடுக்கு நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சியில் இருந்து ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இது மேலும் நகரும்போது வடகிழக்கு பருவமழை வரும் நவம்பர் 1 ஆம் தேதி வாக்கில் துவங்க வாய்ப்புள்ளது.