நாளை தருமபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா; ரூ.1044 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை திறக்கிறார் முதல்வர்…
தருமபுரி
நாளை தருமபுரியில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.1044 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி தமிழக அரசின் சார்பில் தர்மபுரியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழக சட்டபேரவை தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கிறார்.
தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் வரவேற்றுப் பேசுகிறார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து ரூ.1044 கோடியே 87 இலட்சம் மதிப்பிலான 33 புதிய கட்டிடங்களைத் திறந்து வைக்கிறார். மேலும், ரூ.29 கோடியே 44 இலட்சம் மதிப்பிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளின் சார்பில் 25 ஆயிரத்து 96 பயனாளிகளுக்கும் ரூ.183 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, தமிழக அமைச்சர்கள், தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, வாரியத்தலைவர்கள், அரசு தலைமை கொறடா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.
இறுதியில் ஆட்சியர் விவேகானந்தன் நன்றித் தெரிவிக்கிறார்.