மெர்சல் சோகம்: பேனர் வைத்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் தலை நசுங்கி விஜய் ரசிகர் பலி…
காஞ்சிபுரம்
மெர்சல் படத்துக்கு வாழ்த்துகள் சொல்ல பேனர் வைத்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் விஜய் ரசிகர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் நேரு நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் யோகேஷ் (15). இவர் விஜய்-யின் தீவிர ரசிகர்.
யோகேஷ், தனது நண்பர்களுடன் விஜய்-யின் மெர்சல் படம் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகள் சொல்ல பேனர் ஒன்றை தயார் செய்துள்ளார்.
அந்த பேனரை வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டி சுவர்மீது வைப்பதற்கு நேற்று இரவு கொண்டுவந்து உள்ளனர்.
பேனரை வைக்க சுவர்மீது ஏறியபோது எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து யோகேஷ் மீது விழுந்தது. இதில், யோகேஷ் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் காவலாளர்கள் விரைந்து வந்து யோகேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மெர்சல் படத்துக்கு வாழ்த்துகள் சொல்ல பேனர் வைக்க நினைத்த விஜய் ரசிகர் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவத்தால் அந்தப் பகுதி விஜய் ரசிகர்கள், யோகிஷின் நண்பர்கள், பெற்றோர், உறவினர் என அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.