அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்…
நாகப்பட்டினம்
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய 22-வது மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு கட்சி நிர்வாகி எஸ்.நாகூரான் தலைமைத் தாங்கினார். நிர்வாகிகள் கே.முனியாண்டி, ஆர்.சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். வி.எஸ்.கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர் கே.கைலாசம், நகரச் செயலாளர் சி.டி. ஜோசப், கட்சி நிர்வாகிகள் டி.அண்ணாதுரை, டி.ஜான்கென்னடி, வி.பூசாந்திரம் உள்பட பலரும் பங்கேற்றுப் பேசினர்.
இந்த மாநாட்டில் கட்சியின் புதிய ஒன்றியச் செயலாளராக சோம.ராஜமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும்.
நீடாமங்கலம் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு வழிச்சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
நீடாமங்கலம் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.