விளைநிலத்தில் கலக்கும் கழிவுநீரால் நிலங்கள் நாசம், நோய் பரவும் அபாயம்; எண்ணெய் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்...
திருவாரூர்
திருவாரூரில் தனியார் பாமாயில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விளைநிலத்தில் கலப்பதால் நிலங்கள் நாசமாயின. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அந்த நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில், அடியக்கமங்கலம், கருப்பூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பாமாயில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று உள்ளது.
இங்கிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை அருகில் உள்ள பாசன வாய்க்காலில் திறந்து விடுகின்றனர் என்று மக்கள் மற்றும் விவசாயிகள் பகிரங்க குற்றம் சாட்டினர்.
பாமாயில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கழிவு நீரை பாசன வாய்க்காலில் கலந்து விடுவதால் கருப்பூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சாகுபடி நிலங்களில் எண்ணெய் பரவி, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அப்பகுதி மக்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டுப் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கலிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்.
அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டம் முடித்துக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.