கனிஷ்க் நகைக்கடை அதிபர் கைது... அமலாக்கத்துறை நடவடிக்கை...
வங்கியில் 824.15 கோடி மோசடி செய்த வழக்கில் கனிஷ்க் நகைக்கடை அதிபர் புபேஷ் குமாரை, அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரிடம் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னையில் இயங்கும் கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடை மீது ரூ.824.15 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ.யில் புகார் அளித்திருந்தது.. கனிஷ்க் ஜூல்லரி நகைக்கடை மீது 16 பக்க குற்றச்சாட்டுகளை சிபிஐயிடம் அறிக்கையாக அப்போது தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய, கார்ப்பரேஷன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் ரூ.824.15 கோடி கனிஷ்க் நிறுவனம் செலுத்தாமல் உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் புபேஷ் ஜெயின், போலியான கணக்குகளை காட்டி வங்கியில் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும், கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடைகளில் சோதனை நடத்தவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் புபேஷ் குமார் கைது செய்யப்பட்டார். சில வாரங்களில் ஜாமினில் வந்த அவர், தற்போது தலைமறைவாக இருந்த அவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர். கடந்த மார்ச் மாதம் புபேஷ் குமார் பிடிக்கப்பட்டு சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். புபேஷ் குமாரின் மனைவி நீதா ஜெயினிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், 824.15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கனிஷ்க் நகைக்கடை அதிபர் புபேஷ் குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.
வங்கியில் வாங்கப்பட்ட கட்டண தொகையின் மூலம் என்னென்ன சொத்துக்களை அவர் வாங்கியுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் புபேஷ்குமார் சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அமலாக்கத்துறை புபேஷ் குமாரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.