பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு 6 சவரண், ரூ.30 ஆயிரம் அபேஸ்! திருடர்கள் கைவரிசை!
அரியலூரில், பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கூழாட்டுக்கு குப்பத்தைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. இவர் தனது உறவினர்களுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டின் பின் பக்க கதவை உடைப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. ஜான்சி ராணி தூக்கத்தில் இருந்ததால், பூனை உருட்டுவதாக நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார்.
ஆனால், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் 6 சவரண் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பித்து வெளியே செல்ல முயன்றனர்.
அப்போது சத்தம் கேட்டு ஜான்சி ராணி எழுந்து வந்துள்ளார். கொள்ளையர்களைப் பார்த்த அவர், கூச்சலிட்டுள்ளார். ஜான்சி ராணி சத்தம் போட்டதை பார்த்த கொள்ளையர்கள், கையில் வைத்திருந்த கத்தியால் ஜான்சி ராணியின் தலையில் குத்தியிருக்கிறார்கள். அதோடு, அவரது கழுத்தில் இருந்த தாலிச் செயினையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
தலையில் கத்தியால் குத்துப்பட்ட ஜான்சிராணியை அவரது உறவினர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜான்சி ராணியின் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அருகில் உள்ள மதனை முத்து என்பவரின் வீட்டிலும் கொள்ளைடித்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.