காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர்கரீமுக்கு நிபந்தனை ஜாமின்....!
ஐ.ஏ.எஸ் தேர்வில் காப்பியடித்த விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. இதில், ஐ.ஏ.எஸ் பணிக்கான தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரியான சபீர் கரீம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.
அப்போது வசூல் ராஜா படத்தில் நடிகர் கமலஹாசன் புளூடூத் கருவியை பயன்படுத்தி தேர்வில் பிட்டு அடிப்பது போல் நூதனமுறையில் காப்பி அடித்துள்ளார் சபீர் கரீம். இவருக்கு வீட்டில் இருந்து தொலைபேசி மூலம் அவரது மனைவி உதவியுள்ளார்.
இதையடுத்து காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சபீர் கரிமும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சபீர் கரிம் சிறையில் அடைக்கப்பட்டார்
தேர்வில் காப்பியடிக்க உதவிய அவரது மனைவி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் சபீர் கரிம் ஜாமினில் வெளிவரமுடியாத நிலை நிலவியது.
இந்நிலையில் தன்னையும் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சபீர் கரீம் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் அளித்துள்ளது. இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபீர் கரீம் இன்று விடுவிக்கப்பட்டார்