கனமழையால் பாதிப்பா? திருவாரூர் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருவதால் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துவருகிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள், மழை பாதிப்புகள் குறித்து புகாரளிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை எளிதாக கண்டறிந்து மீட்க முடிகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட மக்கள் புகாரளிக்க உதவி எண்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
கனமழையை எதிர்கொண்டுவரும் டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்ட மக்கள், புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட மக்கள் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 04366 - 226080, 04366 - 226090 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு மழை பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.