திருவாரூரில் தொடர்ந்து பலத்த மழை; தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், மாணவர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
திருவாரூர்
திருவாரூரில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இந்தாண்டு 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யத் தொடங்கிய நிலையில் நேற்று காலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
திருவாரூர் கமலாலயம் மேல்கரை, தென்கரை, திருமஞ்சன வீதி, கொத்த தெரு, வாசன் நகர் போன்ற பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
திருவாரூர் கடைவீதி, இரயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர்த் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். வாரத்தின் முதல் நாளில் பெய்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக திருவாரூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று மதியத்திற்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
அதேபோன்று நீடாமங்கலத்தில் நேற்று பலத்த மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. நீடாமங்கலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.