இதுக்கெல்லாமாய்யா தீக்குளிப்பாய்ங்க...? தினகரன் ஆதரவாளர்னு டூட்டி போட மாட்டேன்றாங்களாம்... டிரைவரின் அதிரடி ஸ்டண்ட்!
நெல்லை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் இன்று திடீர் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதற்கான காரணம் வித்தியாசமானது.
திருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கு ஓட்டிச் செல்லும் 1 டூ 1 பேருந்தை, நெல்லை - தென்காசி சாலையில் அதிவேகமாக ஓட்டச் சொல்லி கொடுமைப் படுத்துகிறார்களாம். இதனைக் கூறிய ஓட்டுநர், தென்காசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரைக் கண்டித்து இன்று திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடன் இருந்த காவலர்கள் ஓடோடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர். நீரு வெவரம் தெரிஞ்ச ஆளுதான வே... வெவரம் தெரியாத ஆளுன்னா பரவாயில்லை... எவ்ளோ பெரிய சீனீயரு நீங்க.. ஒன்னும் தெரியாதவர்னா பரவாயில்ல... என்றெல்லாம் அந்த ஓட்டுநருக்கு அட்வைஸ் மழை பொழிந்தார்கள் பெண் காவலர்கள்.
ஆனால், சட்டையைக் கழற்றி காவலர்களின் கையில் கொடுத்த அந்த ஓட்டுநர் ,கண்களைக் கசக்கிக் கொண்டே சொன்ன ஒரு விஷயம்தான் ஹைலைட்! “தினகரன் ஆதரவாளர்னு எனக்கு ஜோலி கொடுக்க மாட்டேங்காங்க...” என்றார் அழுது கொண்டே! அப்போதுதான், அட வெவரம் தெரிஞ்ச ஆளு நீரு... இதுக்குப் போயி இப்படி செய்யலாமா என்று பெண் காவலர் சமாதானம் சொன்னாலும், அந்த ஓட்டுநர் உலகத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லிவிட்டார்.
இருப்பினும், உடன் அங்கிருந்த ஓட்டுநர் நண்பர்கள் அவரைப் பிடித்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாலும், உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக வண்டி ஓட்டுபவர்களை அரசு போக்குவரத்துக் கழக மேலாளர்கள் கேவலமாகத்தான் நடத்துகின்றனர் என்று குறை கூறினர். போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்குக் காரணமே மேலாளர்கள்தான் என்று பழியைப் போடுகின்றனர் ஓட்டுநர்களில் பெரும்பாலானவர்கள்.