லைசன்ஸே இல்லாம வண்டி ஓட்டுனா..? மாட்டிய ஜெய்!
லைசன்ஸே இல்லாம வண்டி ஓட்டுனா..? மாட்டிய ஜெய்!
குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தும் ஏற்படுத்தி நேற்று பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ஜெய்.
பார்ட்டி படப்பிடிப்பு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு அதிகாலை காரில் சென்றார் நடிகர் ஜெய். அவர் சென்ற கார் நிலை தடுமாறி அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என்பது தெரியவந்ததால், போலீஸார் அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது என்ற வகையில் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கு முன்னரும் ஜெய் மீது, இதே போன்று விபத்து ஏற்படுத்தியதாக புகார் பதியப் பட்டுள்ளது.
பின்னர் போலீஸாரின் பிடியில் இருந்து வீட்டுக்குச் சென்ற ஜெய்யிடம் இன்று போலீஸார் விசாரணைக்குச் சென்றனர். இப்போது ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகள் வந்துள்ள சூழ்நிலையில், அவர் குடித்து விட்டுக் கார் ஓட்டியது தெரியவந்ததால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் குறித்து கேட்பதற்காக போலீஸார் அவர் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது நடிகர் ஜெய், தனது ஓட்டுநர் உரிமம் ஒரு வருடத்துக்கு முன்பே காணாமல் போய் விட்டதாகவும், அதனால் தன்னிடம் தற்போது ஓட்டுநர் உரிமம் கையில் இல்லை என்றும் கூறியுள்ளார். இதை அடுத்து, லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டினார், வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டிச் சென்றார் என மேலும் இரு பிரிவுகளில் புதிதாக வழக்கு ஒன்றை போலீஸார் பதிவு செய்தனராம்! ஏற்கெனவே அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரு பிரிவுகளிலும் வழக்கு பதிவானதால், அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.