திருவண்ணாமலையில் முன்னாள், இன்னாள் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு தொடக்கம்;
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா கொண்டாடும் பள்ளியில் முன்னாள்ம் இன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு தொடக்க விழாவும், குழந்தைகள் தின விழாவும் நேற்று நடைபெற்றன.
இந்த விழாவிற்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.சேகர், உதவித் தலைமை ஆசிரியர் பி.சீனிவாசன், பள்ளி அமைப்புச் செயலர் எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் அ.உஷாராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினர்.
இந்த விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் பேசியது:
"ஒவ்வொரு மாணவரும் தாங்கள் படித்த பள்ளியை மறக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக, தொழிலதிபராக ஆனாலும் படித்த பள்ளியை தங்களது தாய் வீடாக நினைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கு வந்து பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். தற்போது இந்தப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள தற்போதைய, முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு வளர வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கி 2018-ல் 50-ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த பொன் விழாவை அனைத்து முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், தற்போது பயிலும் மாணவர்கள், மக்களுடன் ஆலோசனை நடத்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நாடகம் நடைபெற்றன. இந்த விழாவில், முன்னாள் மாணவர் அமைப்பின் பொருளாளர் தி.பாரதி, ஆலோசகர்கள் என்.சீனிவாசன், சு.சிவப்பிரகாசம், துணைத் தலைவர் கே.ராஜா, துணைச் செயலர்கள் கே.வெங்கட்ராமன், அ.செ.பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கந்தன், பி.ஏ.அப்சர் அலி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.முருகன், சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.