பத்தாவது முறையாக அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்; 4-வது நாளாக போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி…
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையால் பத்தாவது முறையாக தரைப்பால அடித்துச் செல்லப்பட்டது. பாலம் இருந்த இடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ளது தொட்டல்லா ஆறு. இந்த ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால், அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் நான்காவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
அஞ்செட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், தொட்டல்லா ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
கடந்த 11-ஆம் தேதி பெய்த பலத்த மழைக்கு, அஞ்செட்டி- ஒகேனக்கல் சாலையில் உள்ள தரைமட்ட பாலம் பத்தாவது முறையாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தொட்டமஞ்சி, கேரட்டி, சேசுராஜபுரம், நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு உட்பட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
தொட்டல்லா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செல்வதால், நான்காவது நாளாக நேற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட தேவைக்காக வெளியூர் செல்வோர் பெருமளவு பாதிப்படைந்தனர்.