கொள்ளிடத்தில் நாளை சாலை மறியல் போராட்டம் – விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு…
நாகப்பட்டினம்
அனைத்துப் பாசன வாய்க்கால்களையும் தூர்வாரக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கொள்ளிடத்தில் நாளை சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் வட்டார விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், கொள்ளிடம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும் வகையில் அனைத்துப் பாசன வாய்க்கால்களையும் தூர்வாரக் கோரியும்,
கொள்ளிடம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு நிகழாண்டு காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முரண்பாடு உள்ளதைக் கண்டித்தும்,
விவசாயிகளுக்கு நூறு சதவீத காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்தும் கொள்ளிடம் கடை வீதியில் நாளை காலை 10 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இதில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பர்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.