வலியால் துடித்த பெண்ணுக்கு 108 அவசர ஊர்தியிலேயே பிரசவம் பார்த்த ஊழியர்கள்; தாயும், சேயும் நலம்…
அரியலூர்
அரியலூரில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் முன்பே பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்ததால் 108 அவசர ஊர்தி ஊழியர்களே பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகே உள்ள நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மனைவி பவானி (27).
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவவலி ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.
வழக்கமாக 108 அவசர ஊர்தி சேவையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு அவசர ஊர்தி வந்தபோது, பவானிக்கு பிரசவ வலி அதிகமாக இருந்தது.
இதனையடுத்து மருத்துவ உதவியாளர், அவசர ஊர்தி ஊழியர்களே பவானிக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், தாயும், சேயும் அதே அவசரஊர்தி மூலம் குமிழியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
சரியான நேரத்தில் காலம் தாழ்த்தாமல் அவசர ஊர்தி ஊழியர்கள் பிரசவம் பார்த்ததால் தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் நன்றித் தெரிவித்தனர்.