ஆற்றில் நீர் வராததற்கு தூர்வாரப்படாததே காரணம் – சாலை மறியலில் குதித்த விவசாயிகள்…
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பரவாக்கோட்டையில் நீர் வரும் பாதை தூர்வாரப்படாததால், அடைப்பு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, கீழக்குறிச்சி, பெருகவாழ்ந்தான் வரைவுள்ள பகுதிகளுக்கு வடவாற்றின் தண்ணீர் மூலம் விவசாயப் பாசனத்திற்கு பயன்பட்டு வந்தது.
சமீபத்தில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணைக்கு வந்தது. பின்னர் அந்த தண்ணீர் மற்ற ஆறுகளுக்குப் பிரித்து செல்லும். இதில் ஓர் ஆறு மன்னார்குடி, தஞ்சை பிரதான சாலையில் உள்ள வடுவூரிலிருந்து வடவாறாக பிரிந்து, பரவாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விவசாயப் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது.
அண்மையில் திறக்கப்பட்ட தண்ணீர் உள்ளிக்கோட்டை வரை வந்துள்ளதாகவும், அங்கிருந்து பரவாக்கோட்டைக்கு ஆறு செல்லும் பகுதியில் காட்டுச்செடிகள் மண்டிக்கிடப்பதாலும், நிகழாண்டு தூர்வாரப்படாததாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பரவாக்கோட்டைக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பரவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக தண்ணீர் வரும் பாதையை சரி செய்து விவசாயப்பணி தொடங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரவாக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே ந.தங்கவேல் தலைமையில் திரளான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த பரவாக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் விஜயராஜ், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மதியழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.