டீக்கடை கேனில் டெங்கு கொசுப் புழுக்கள்; சுத்தப்படுத்திவிட்டு உரிமையாளருக்கு ரூ.5000 அபராதம் விதித்த ஆட்சியர்…
தஞ்சாவூர்
கும்பகோணத்தில் டீ கடையில் உள்ள கேனில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பதை பார்த்த ஆட்சியர், அதனை துப்புரவாளர்கள் மூலம் சுத்தப்படுத்திவிட்டு கடையின் உரிமையாளருக்கு ரூ.5000 அபராதம் விதித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு நடத்தினார்.
அந்த ஆய்வின்போது பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடைகள், விடுதிகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழுக்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒரு டீ கடைக்குள் சென்று அங்குள்ள கேனில் இருந்த தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழு இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர், துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அந்த கேனில் இருந்த தண்ணீர் கீழே கொட்டப்பட்டது. மேலும், டீ கடையின் உரிமையாளருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு செய்தார் ஆட்சியர். அப்போது அலுவலகத்தின் பின்புறம் பழைய பொருட்களை வைத்திருந்ததால் சங்கத்திற்கூ ரூ.500 அபராதம் விதித்தார்.
அதன்பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியது:
“தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 600 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதில், சுமார் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறிப்பட்டது. அவர்களுக்கு டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.