சுற்றுலா விசாவின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டாம் – ஆட்சியர் எச்சரிக்கை…
நாகப்பட்டினம்
தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா விசாவின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டாம் என்று நாகப்பட்டினம் ஆட்சியர் சீ.சுரேஷ் குமார் எச்சரித்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ் குமார் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடி செல்பவர்களும் துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றபின் முகவர்களாலும், வேலை அளிப்பவர்களாலும் பல வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர்.
தகுதிக்கேற்ப வேலை வழங்காமல், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துக் கொள்கின்றனர். இதனால், உணவின்றி, நாடு திரும்ப உரிய பணமின்றி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
சுற்றுலா விசாவில் வேலை தேடி ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என துபாயில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்து உள்ளது.
எனவே, குடியுரிமை இல்லா தமிழர்கள் சுற்றுலா விசாவின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டாம்” என்று எச்சரித்தார்.