விவசாயம் பாதித்ததால் இந்த வருடம் தீபாவளி டல் அடிக்குது – குமுறும் வணிகர்கள்…
இராமநாதபுரம்
திருவாடானை பகுதியில் இந்த வருடம் நிலவிய கடுமையான வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், இந்த வருட தீபாவளிக்கு துணி, மளிகை வியாபாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது என்று வணிகர்கள் தெரிவித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள மக்களின் பிராதன தொழில் விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழில்.
கடந்தாண்டு கடுமையான வறட்சி நிலவியதுபோலவே இந்த ஆண்டு முதலில் மழை பெய்ததால் மழையை நம்பி விதைகளை விதைத்து விட்டனர். பின்னர் கடும் வெயில் அடித்ததால் விதைகள் முளைக்காமலே மக்கிவிட்டன. இதனால் விவசாயிகள் தீபாவளி கொண்டாடுவதில் நாட்டம் எதுவும் காட்டவில்லை.
மேலும், வறட்சி பாதிப்பு எதிரொலியாக துணிக் கடைகள், மளிகைக் கடைகளிலும் வியாபரம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது என்று வணிகர்களும் தெரிவித்தனர்.
பெருமளவில் முதலீடு செய்து பொருள்கள் வாங்கிவந்த நிலையில் மக்கள் கூட்டம் இல்லாமல் வியாபாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது என்றும் வணிகர்கள் வருத்தத்தோடு தெரிவித்தனர்.