தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு ! இது வரை 2500 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
தமிழகத்தில் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும் இதுவரை 2,500 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதற்காக தற்போது சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி காய்ச்சல் சிறப்பு வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், அவர்களை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை, டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். காய்ச்சல் நோயாளிகளை கையாளுவது குறித்தும், எவ்வாறு ஆய்வக பரிசோதனைகளை விரைந்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் சுகாதாரத்துறை டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த ஒரு மாதத்தில் மட்டும், டெங்கு அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருமழை தொடங்கியதும் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகிக்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.