சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டி திமுகவினர் ஆர்ப்பாட்டம்…
கன்னியாகுமரி
சுசீந்திரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடத்தில் இருந்து தேரூர் வழியாக சுசீந்திரத்திற்கு சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்தப் பணி தேரூர் வரை முடிவடைந்தது. தேரூரில் இருந்து சுசீந்திரம் வரை இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது.
இதனையடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், மக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்படடு இருந்தது.
அதன்படி, நேற்று காலை சுசீந்திரத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கூடினர். அவர்கள் சுசீந்திரத்தில் இருந்து தேரூர் செல்லும் திருப்பத்தில் சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேரூர் பேரூர் செயலாளர் முத்து, சுசீந்திரம் பேரூர் செயலாளர் மாடசாமி, ஒன்றிய துணை அமைப்பாளர் ஐயப்பன், பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், சுசீந்திரம் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளித்தால்தான் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவோம்” என திமுகவினர் கூறினர்.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கீதாகுமாரி சம்பவ இடத்துக்கு சென்று ஆஸ்டின் எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, முடங்கி கிடக்கும் சாலை பணியை விரைவில் முடிப்பதாகவும், அதற்கான ஆயத்த பணியை உடனே தொடங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன், பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலை பணி தொடங்கப்பட்டது.
இதனைப் பார்த்த தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.