விபத்தில் இறந்த ஒன்றிய அ.தி.மு.க செயலாளருக்கு முதல்வர் நேரில் மரியாதை செலுத்தினார்;
நாமக்கல்
நாமக்கல்லில் விபத்தில் இறந்த ஒன்றிய அ.தி.மு.க செயலாளருக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவருமான கந்தசாமி திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 8.30 மணிக்கு பள்ளிபாளையம் அருகே பாதரையில் உள்ள கந்தசாமி வீட்டுக்கு வந்தார்.
முதலமைச்சர் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர் (நாமக்கல்), தென்னரசு (ஈரோடு), நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தாசில்தார் ரகுநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து விபத்தில் இறந்த கந்தசாமியின் உடல் பாதரையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.