எச்சரிக்கை: இரயிலில் பட்டாசு கொண்டுச் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை; ரூ.3000 அபராதம்…
வேலூர்
இரயிலில் பட்டாசு கொண்டுச் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதிக்கப்படும் என இரயில்வே பாதுகாப்பு காவலாளார்கள் எச்சரித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை இரயில்வே பாதுகாப்பு காவலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இரயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை கொண்டு வருவதைத் தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டாசு உற்பத்தி செய்யப்படும் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து வரும் விரைவு இரயில்கள், வாராந்திர இரயில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட வரும் பயணிகள் துணி, இனிப்பு ஆகிவற்றைக் கொண்டு செல்ல எந்த தடையுமில்லை. அதேநேரத்தில் பட்டாசு வகைகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதிக்கப்படும்.
வேலூர் மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைத்து இரயில்களில் இரயில்வே பாதுகாப்புப் படையினர், காவலாளர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பார்சல்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதைப் பயன்படுத்தி திருடர்கள் பயணிகளின் உடைமைகளைத் திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. ஏதேனும், உதவித் தேவைப்பட்டால் அந்தந்த இரயில் நிலையங்களில் உள்ள காவலாளர்களை மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.