பூமிக்குள் அரை அடி இறங்கிய பாலம்; பொதுமக்கள் அதிர்ச்சி!
மணிமுத்தாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட பாலம் சுமார் அரை அடி, பூமிக்குள் புதைந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த பாலத்தை முதலமைச்சர் திறக்கவிருந்த நிலையில் பாலம் பூமிக்குள் புதைந்தது.
நாமக்கல் மாவட்டம், மணிமுத்தாற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து தமிழக அரசு, மணிமுத்தாற்றி குறுக்கே புதிய பாலம் ஒன்றை கட்டியது.
இந்த பாலத்தை வரும் 16 ஆம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் தார் இணைப்பு பகுதி சுமார் அரை அடி வரை பூமிக்குள் புதைந்துள்ளது. பாலம் அரை அடி, பூமிக்குள் புதைந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தரமில்லாத கட்டட பணி காரணமாக பாலம் கீழே இறங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.