கடன் வாங்கியவர்களின் வீட்டை எழுதி வாங்கிய கந்துவட்டிகாரர்கள்; மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டோர் கண்ணீர்…
திருநெல்வேலி
வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் அசலுக்கு அதிகமாக வட்டி செலுத்திய பின்பும் வீட்டை எழுதி வாங்கிய கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.
இதற்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த 23-ஆம் தேதி நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நால்வர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுக்க வந்தவர்களை காவலாளார்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
களக்காடு அருகே உள்ள பத்மநேரியைச் சேர்ந்த அந்தோணி என்பவர் தனது மகன்கள், மருமகள்கள், பேத்திகளுடன் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில், “நான் குடும்ப செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். இதற்கு கந்துவட்டியாக என்னிடம் ரூ.8 இலட்சம் வசூல் செய்து விட்டார். எனது வீட்டையும் எழுதி வாங்கிவிட்டார்.
மேலும், எனது வாழைகளையும் சேதப்படுத்திவிட்டு என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.
ஆலங்குளம் காந்திநகரை சேர்ந்த சேகர் மனைவி பார்வதி ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “நான் ஐயனார்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் எனது மகள் திருமணத்திற்கு ரூ.5 இலட்சம் கடன் வாங்கி இருந்தேன். அதற்கு நான் அதிக வட்டி கொடுத்துவிட்டேன். இருந்தாலும் அவர் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள எனது வீட்டை எழுதி வாங்கிவிட்டார்.
நான் வீட்டை கேட்டால் ரூ.9 இலட்சம் தர வேண்டும் என்று மிரட்டுகிறார். கந்துவட்டிக்கு வீட்டை எழுதி வாங்கியவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தரவேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.