ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் – கும்பகோணத்தில் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர்
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கும்பகோணத்தில் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு நெல் - அரிசி வணிகர்கள், நவீன அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் காந்திபூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தகர் சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ், வர்த்தகர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் “அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்,
இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்,
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்,
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நரம்பியல்பிரிவு, இதயசிகிச்சை பிரிவுகளில் கூடுதல் மருத்துவமனை நியமிக்க வேண்டும்,
மகாமக குளம், பொற்றாமரை குளத்தில் அடியார்கள் புனித நீராட வசதியாக எப்போதும் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.