வெட்டிக் கொல்லப்பட்ட தலையாரி மகளுக்கு அடக்கம் செய்தவுடன் சுடுகாட்டில் வைத்து பணி நியமன ஆணை… தமிழக அரசு அதிரடி !!
தேவகோட்டை அருகே நில ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது வெட்டிக் கொல்லப்பட்ட தலையாரியின் உடல் அடக்கம் நடந்த இடத்தில் அவரது மகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திருவேகம்பத்தூர் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது கண்மாயில் 3 ஏக்கர் அளவிலான இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தது குறித்து புகார் செய்யப்பட்ட நிலையில், கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இதற்கு திருவேகம்பத்தூரை சேர்ந்த தலையாரி ராதா கிருஷ்ணன் என்பவர் தான் காரணம் என்று கணேசன் எண்ணினார். இதையடுத்து அவர், ராதா கிருஷ்ணனை போனில் மிரட்டினார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, அவரை வழிமறித்து கணேசன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதில் சம்பவ இடத்திலேயே ராதா கிருஷ்ணன் இறந்தார்.
இதனை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தலையாரியை வெட்டி கொன்ற கொலையாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கொல்லப்பட்டவரின் வாரிசுக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
இதையடுத்து அவர்களது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இந்தநிலையில், தலையாரி உடல் அவரது ஊரான திருவேகம்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தாரிணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வி.ஏ.ஓ. பணி நியமன ஆணையை வழங்கினார்.