இரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களில் ஓய்வுப் பெற்றவர்களை நியமிப்பதா? இரயில்வே யூனியன் எதிர்ப்பு…
திருவாரூர்
இரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களில் ஓய்வுப் பெற்றவர்களை நியமிக்கக் கூடாது என்றும், அப்ரன்டிஸை நியமிக்க வேண்டும் என்றும் தட்சிண இரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
தட்சிண இரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார்.
“கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி இரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 136 காலி பணியிடங்களுக்கு இரயில்வேயில் ஓய்வப் பெற்றவர்களை திருச்சி கோட்டம் நியமிக்க இருக்கிறது.
நவம்பர் 3-ஆம் தேதி இதற்கான விண்ணப்பம் கோரி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தெற்கு இரயில்வேயில் பயிற்சி முடித்த 2300 அப்ரன்டிஸ் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கடைநிலை ஊழியர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு இருக்கும்போது, ஓய்வுப் பெற்றவர்களைக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்பினால், அப்ரன்டிஸ் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, அப்ரன்டிஸ் இளைஞர்களைக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுப் பெற்றவர்களை தற்காலிகமாக நியமிக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.