ஆடி காருக்கு பதில் ஆம்புலன்சில் வந்த கணவன்...! பதறிய மனைவி...! புகார் கூறிய பிரபல மருத்துவமனை!
மருத்துவமனைக்கு நோயாளியை ஆடி காரில் கொண்டு வந்து சேர்த்து விட்டு, திரும்பும்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் திருடப்பட்டதாக பிரபல மருத்துவமனை புகார்.
சென்னை, மதுரவாயலைச் சேர்ந்தவர் நிக்கல்சன். தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக அவரை சென்னை, அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். அதாவது தனது ஆடிக்காரில் நோயாளியை அழைத்துக் கொண்டு அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனையில் உறவினரை சேர்த்துவிட்ட நிக்கல்சன், வீடு திரும்ப எத்தனித்தார். மருத்துவமனை வளாகம் வந்த அவர், தான் வந்த ஆடி காருக்கு பதிலாக, அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றார். வீட்டுக்கு ஆம்புலன்சில் வருவதைப் பார்த்தை நிக்கல்சனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
ஆடி காருக்கு பதிலாக, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்ததை நிக்கல்சன் உணர்ந்தார். இந்த நேரத்தில், ஆம்புலன்ஸ் வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டார்கள் என்று, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அப்போலோ நிர்வாகம் புகார் அளித்தது.
இதனை அறிந்த நிக்கல்சன் பதறி அடித்துக் கொண்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, போலீசார் நிக்கல்சனிடம் விசாரித்து வருகின்றனர். தான் போதையில் இருந்ததாக, போலீசாரிடம் நிக்கல்சன் கூறியுள்ளார். பிரபல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.