ஒரு மாதத்திற்கு பிறகு ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் சவாரி – உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்…
தருமபுரி
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்ததால் ஒரு மாதத்திற்கு பிறகு பரிசல் சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் தருமரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக நொடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்தது.
வழக்கமாக சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து இருந்தாலே ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கும். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கப்படவில்லை. அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக நீர்வரத்து படிப்படியாகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 4500 கன அடியாக இருந்தது. இதையடுத்து, வருவாய் அலுவலர்கள், காவல், தீயணைப்புத் துறையினர் ஒகேனக்கல்லில் நேரில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி சனிக்கிழமை 330 பரிசல்களும், ஞாயிற்றுக்கிழமை 480 பரிசல்களும் இயக்கப்பட்டது. விடுமுறை நாள்கள் என்பதால், தருமபுரி மட்டுமல்லாது வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சியுடன், உற்சாகத்துடனும் விடுமுறையைக் கழித்தனர்.