அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்கணுமாம் – அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு…
தூத்துக்குடி
அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளர் இராமசாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்ற வெளியிட்டார்.
அதில், “அஞ்சல் நிலையத்தில் வைத்திருக்கும் கணக்குகளில் பணத்தை முதலீடு செய்யவும், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றிற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
புதிதாக இந்தக் கணக்குகளை தொடங்குவோர் ஆதார் எண்ணுடன் கணக்குத் தொடங்க வேண்டும்.
ஏற்கெனவே, அஞ்சலங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளுடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
மேலும், டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மாதாந்திர கணக்குக்கான வட்டி, மூத்த குடிமக்கள் கணக்குக்கான வட்டி மற்றும் அனைத்து அஞ்சலக கணக்குக்கான முதிர்வுத் தொகையினையும் சேமிப்புக் கணக்கின் மூலமே பெற முடியும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.