தொடர்ந்து இடிந்து விழும் அரசு கட்டடங்கள்; நாகையில் மேலும் ஒரு கட்டடம் இடிந்தது!
நாகை மாவட்டம் பொறையாரில் போக்குவரத்து பணிமனை கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், தீயணைப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழகக் கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் கட்டடத்தில் தூங்கிக் கொண்டிருந்த 7 டிரைவர்கள், கண்டர்டர் என 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்தது.
இந்த நிலையில், பழமையான கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை கட்ட வேண்டும் என்று அரியலூர் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேருந்து நிலையமும், இடிந்து விழுந்து அபாயம் உள்ளதாகவும், இதனை அகற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள அரசின் பழயை
கட்டடங்களை அகற்றி விட்டு புதிய கட்டடங்களை அமைக்கவும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டடம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகிய நிலையில், நாகையில் தீயணைப்பு நிலையத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தீயணைப்பு நிலையம் 1943 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் சீரமைத்து தரக்கோரி அரசுக்கு பலமுறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தீயணைப்பு நிலைய கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், பழமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பித்து அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், பொறையாரில் நடந்த விபத்து போன்று தமிழகத்தில் வேறு எங்கும் நடக்காத வண்ணம் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி கூறினார்.