பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 15 பேர் கைது; காவல்துறை அதிரடி…
ஈரோடு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் உள்ள தனியார் கரும்பு ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 15 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழ்நாடு கரும்பு வளர்ப்போர் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் கரும்பு ஆலை முன்பு ஒன்று திரண்டு சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க குழுவின் தலைவர் தேவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி முத்துசாமி, துணைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 25 பேர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகி முத்துசாமி, “வியாழக்கிழமை அன்று அனுமதிப் பெற்று மாநிலத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது காவலாளர்கள் தடியடி நடத்தி எங்களை கலைத்தனர். இதில் இரவீந்திரன் உள்பட பல விவசாயிகள் காயம் அடைந்தனர்.
“இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மேலும் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.300 கொடுப்பதாக கரும்பு ஆலை உரிமையாளர்கள் கூறினார்கள். ஆனால் அவர்கள் ஒப்புக்கொண்டபடி உடனே வழங்க வேண்டும்” உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்’ என்றார்.
இந்த நிலையில் அங்கு வந்த சத்தியமங்கலம் காவலாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 15 பேரை கைது செய்தனர்.