குளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்..! அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..!
சென்னை புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதி போன்ற சொகுசு வசதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் புறநகர் ரயில்சேவை திட்டம். சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரையில் ஒரு வழித்தடத்திலும், வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை ஒரு வழித்தடத்தில் இந்த புறநகர் ரயில் சேவை இருக்கிறது. இதில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் புறநகர் ரயிலை பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதனிடையே இந்த ரயில்சேவையில் நிறைய குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் சார்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரயிலில் சிலர் தொங்கி கொண்டு செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் தெற்கு ரயில்வே சார்பாக வழக்கறிஞர் பி.டி.குமார் ஆஜரானார். விரைவில் புறநகர் ரயில்களில் குளிர் சாதன வசதி, தானியங்கி கதவுகள் போன்ற புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.