'தமிழகம் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ வேண்டும் '..! அயோத்தி தீர்ப்பு குறித்து முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..!
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எந்த வகையில் வந்தாலும் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகுவதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், தீர்ப்பு யாருக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ அமையாது என்று தெரிவித்திருந்தார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைதியான மற்றும் இணக்கமான சூழ்நிலையை பேணுவது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை தமிழக மக்கள் மதித்து நடக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீர்ப்பை மதித்து சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதிப்பூங்கா மாநிலமாக திகழச் செய்யுங்கள் கூறியிருக்கும் முதல்வர் இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாக திகழ அனைத்து மத, கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.